அதிமுகவினரை விமர்சிப்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும், நாடே கண்டிராத வகையில் மிகவும் எழுச்சிக்கரமாக மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை அரசியல் விஞ்ஞானி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவை தொட்டவன் கெட்டான் என அண்ணாமலைக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதிமுகவினரை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் ராகுல் காந்தி வழக்கு தீர்ப்பு குறித்த கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்பில் கருத்து கூற முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என பதிலளித்தார்.